மருத்துவர்கள் நிலைமையை புரிஞ்சிகோங்க பிளீஸ்.... சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்...
மருத்துவர்கள் தாக்கபடுவது தவறு எனவும், அவர்கள் நிலையையும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் ஒருவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த மருத்துவரை மாணவரின் உறவினர்கள் தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த சக மருத்துவர்கள் பணியை புறக்கணித்து திடீரென நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருந்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சுதாகர் என்பவர் சிகிச்சை அளிக்க ஆளின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பெரிதும் கண்டனம் தெரிவித்தனர்.
மருத்துவரை தாக்கிய உறவினர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என கோரி இன்றும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சென்னை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
பேச்சுவார்த்தையை தொடர்ந்து சென்னை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பயிற்சி மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.
கல்லூரி மாணவர்களுடன் 15 பேர் மருத்துவர்களை தாக்கியுள்ளனர்.
மருத்துவர்கள் தாக்கபடுவது தவறு. அவர்கள் நிலையையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மருத்துவர் தாக்கப்பட்டதால் தான் போராட்டம் நடைபெற்றது.
இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கபடும்.
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உரிய பாதுக்காப்பு வழங்கப்படும்.
மருத்துவர்களை தகாத முறையில் பேசுவது மிரட்டுவது, தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவ பாதுகாப்பு சட்டத்தில் இணைக்கபட வேண்டிய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
தனிப்பட்ட முறையில் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பயிற்சி மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவமனையின் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
விபத்து மற்றும் அவசர சிகிச்சை குறித்த செய்திகள் வெளியிட தனிக்குழு அமைக்கப்படும்.
கண்காணிப்பு குழுவில் மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவர்கள், அரசு வழக்கறிஞர்கள் இடம் பெறுவார்கள்.
சிகிச்சை பலனின்றி 4 பேர் இறந்ததாக செய்தி வெளிவருவது தவறு.
ஒரு நோயாளியை கவனிக்க ஒரு பார்வையாளர் மட்டுமே அனுமதிக்கபடுவார்.
சுற்றுசுவர் இல்லாத அரசு மருத்துவமனைகளில் சுற்றுசுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.