சுயதொழில் செய்ய விருப்பமா? ஆன்லைனில் விண்ணப்பித்தால் தொழிற்கடன் பெறலாம் - ஆட்சியர் அழைப்பு…
பெரம்பலூர்
பெரம்பலூரில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்ய விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பித்து தொழிற்கடன் பெறலாம் என்று ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேற்று செய்திக்குறிப்பை வெளியிட்டார். அதில், “குறுந்தொழில்கள் மற்றும் கிராமத் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், பிரதம மந்தரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம், கதர் கிராம தொழில் ஆணையர், கதர் கிராம தொழில் வாரியம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
பிரதம மந்தரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் கடன் பெற்று சுயதொழில் செய்ய விரும்பும் பயனாளிகள் http://www.kviconline.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
உற்பத்திச் சார்ந்த தொழில் தொடங்க அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரையிலும், சேவைச் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரையிலும் வங்கி கடன் வசதி செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 இலட்சத்துக்கு மேல் திட்ட மதிப்பீடு உள்ள தொழில்களுக்கும், சேவைப் பிரிவின் கீழ் ரூ.5 இலட்சத்துக்கு மேல் திட்ட மதிப்பீடு உள்ள தொழில்களுக்கும், குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் மாவட்டத் தொழில் மையம் மூலமாகவும், கிராம பகுதிகளில் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில்கள் வாரியம் மூலமாகவும் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, நடப்பு நிதியாண்டில் மாவட்டத் தொழில் மையம் மூலம் மானியத்திற்காக ரூ. 111.50 இலட்சமும், 440 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
எனவே, ஆர்வமுள்ள தொழில் முனைவோர் மேற்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.