Do not take boats into the sea
கன்னியாகுமரி, இராமநாதபுரம் கடல் பகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும், இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறியுள்ளார்.
வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நாளை மற்றும் நாளை மறுநாட்களில் கன்னியாகுமரி, ராமநாதபுரம் கடற்பகுதியில் சுமார் இரண்டரை மீட்டர் உயரத்திற்கு கடல் அலையின் சீற்றம் இருக்கும் என்றார். அதாவது நாளை காலை 8.30 மணியில் இருந்து நாளை மறுநாள் இரவு 11 மணி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றார்.
இரண்டரை மீட்டர் உயரத்துக்கு அலையின் சீற்றம் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடல் சீற்றம் அதிகமாக இருப்பது பற்றி மாவட்ட நிர்வாகங்களுக்கு முன்னதாகவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை கடல் அலைகள் உயரும் என இன்சாட் அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, கடலோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம். கடலுக்குள் படகுகளை எடுத்துதச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்ட கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
