வெளி மாவட்ட ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க கூடாது – காஞ்சிபுர ஆட்சியரிடம் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு…
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் வெளி மாவட்ட ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்க கூடாது என்று ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆட்சியர் பா.பொன்னையாவிடம் நேற்று மனு ஒன்றை அளித்தனர்.
அதில், “கடந்த 7 ஆண்டுகளாக, காஞ்சிபுரம் நகரில் மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சங்கர மடத்திலிருந்து பேருந்து நிலையம், காந்தி சாலை, டோல்கேட் வழியாக பச்சையப்பன் கல்லூரி வரை பகிர்வுந்து (ஷேர் ஆட்டோ) இயக்கி வருகிறோம்.
இது நூற்றுக்கணக்கான குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துக்கு ஏதுவாக உள்ள நிலையில் தற்போது புதியதாக வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட பதிவு எண் கொண்ட ஆட்டோக்கள் அதிக அளவில் காஞ்சிபுரத்தில் இயக்கப்படுவதால் இத்தொழிலை நம்பியுள்ள உள்ளூர் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாது காஞ்சிபுரம் மாவட்ட பதிவெண் கொண்ட ஆட்டோக்கள்தான் இயக்க வேண்டும் என ஏற்கெனவே அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, உள்ளூர் மக்களின் வசதிக்கேற்றவாறு ஆட்டோக்களை இயக்கி வருகிறோம்.
இந்த நிலையில், வெளியூர் ஆட்டோக்கள் இயக்கப்படுவதோடு பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக அவை நிறுத்தப்படுவதால் வாகன நெரிசல்களும் ஏற்படுகின்றன.
இதுதொடர்பாக, பலமுறை உரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, வெளி மாவட்ட ஆட்டோக்களுக்கு அனுமதி மறுத்து, தங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தனர்.