விவசாயிகளின் சொத்துக்களை ஜப்தி செய்யகூடாது - வங்கி மேலாளருக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
விவசாயிகளின் சொத்துக்களை ஜப்தி செய்யக்கூடாது எனவும், விவசாயிகளின் குறுகிய, மத்திய கால கடன்கள் நீண்ட கால கடன்களாக மாற்றம் செய்ய வேண்டும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் வங்கி மேலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் 41 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
அப்போது, விவசாயிகளின் சொத்துக்களை வங்கிகள் ஜப்தி செய்யக்கூடாது, கடன்களை நீண்ட கால கடன்களாக மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.
அதன்படி தற்போது, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் விவசாயிகளின் சொத்துக்களை ஜப்தி செய்யக்கூடாது என வங்கி மேலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது :
விவசாயிகளின் இடுபொருள் மானிய தொகையை கடனில் வரவு வைக்க கூடாது.
விவசாயிகளின் சொத்துக்களை வங்கிகள் ஜப்தி செய்ய கூடாது.
விவசாயிகளின் குறுகிய, மத்திய கால கடன்கள் நீண்ட கால கடன்களாக மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் நிர்மல்ராஜ் கூறியுள்ளார்.