ரூ.613 கோடிக்கான தேர்தல் பத்திரங்கள் எங்கே என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி கடந்த 12ஆம் தேதி சமர்ப்பித்தது. தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்தது. அதில், ‘கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன் தொடர்ச்சியாக, தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. அதில் இரண்டு பட்டியல்கள் உள்ளன. முதல் பட்டியலில், தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தொகை மதிப்பு மற்றும் தேதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டாவது பட்டியலில், அரசியல் கட்சிகளின் பெயர்கள், பத்திரங்களின் மதிப்புகள் மற்றும் அவை பணமாக்கப்பட்ட தேதிகள் உள்ளன.

ஆனால், எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்ற விவரங்கள் இடம் பெறாமல் இருந்தது. அதனை தெரிந்து கொள்ள உதவும் தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்களை வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் பத்திரங்களை வாங்கியது யார்? எந்த தேதியில் வாங்கினார்கள்? எவ்வளவு தொகை கொடுத்து வாங்கினார்கள்? எந்த அரசியல் கட்சி எந்த தேதியில் குறிப்பிட்ட தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றிக் கொண்டது என்ற விவரங்களை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.

நெல்லை, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

அதன்படி எஸ்பிஐ வங்கி வழங்கிய புதிய விவரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. புதிய தகவல்களில் எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளிடம் இருந்து நிதி பெற்றன என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், ரூ.613 கோடிக்கான தேர்தல் பத்திரங்கள் எங்கே என திமுக கேள்வி எழுப்பியுள்ளது. விடுக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் தொகை ரூ.12,156 கோடி எனவும், தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற தொகை ரூ.12,769 கோடி எனவும் தெரிவித்துள்ள திமுக, எஞ்சிய ரூ.613 கோடிக்கான தேர்தல் பத்திரங்கள் எங்கே எனவும், பாஜகவை காப்பாற்ற எஸ்பிஐ வங்கி பொய் சொல்கிறதா? எனவும் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.