காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டி மாற்றுத்திறனாளிகள் முழக்கம்...
நாகப்பட்டினம்
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பாடினம் மாவட்டம், மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, "காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்.
காவிரி டெல்டா பகுதிகளில் ஐட்ரோ கார்பன் திட்டத்தை தடை செய்ய வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இதில் வட்ட செயலாளர்கள் சிதம்பரம் (மயிலாடுதுறை), செல்வராஜ் (தரங்கம்பாடி), சண்முகம் (குத்தாலம்), வட்ட தலைவர்கள் அருள்மணி (மயிலாடுதுறை), வேல்முருகன் (தரங்கம்பாடி), நாகராஜன் (சீர்காழி), செல்வராஜ் (குத்தாலம்) உள்பட பலர் பங்கேற்றனர்.