இதுக்கா நான் உத்தரவிட்டேன். சே!- நீதிபதி வேதனை கண்டனம்…
கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியளிக்கும்படி உத்தரவு பிறப்பித்ததற்காக நீதிபதி பி.என்.பிரகாஷ் தன் உத்தரவில் வேதனையும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள சில கோவில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டுச் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மனு அளித்துள்ளனர். அந்த் மனுக்க்களை பரிசீலித்து, நிகழ்ச்சிக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கும்படி உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்தவர் நீதிபதி பி.என்.பிரகாஷ். நாமக்கல் மாவட்டத்தில் அடிக்கடி கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு வழக்குகள் தொடரப்படுகிறதே என்று சந்தேகித்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை ஆஜராக உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து, விசாரித்து அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி துணை காவல் கண்காணிப்பாளர் அறிக்கையும், வீடியோ பதிவையும் தாக்கல் செய்தார். அந்த வீடியோவில், ஆடல் பாடல் என்ற பெயரில் பெண்கள் ஆபாச நடனம் ஆடுவதும், இளைஞர்கள் குடிபோதையில் கும்மாளமிடும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தன.
இதுபோன்ற ஆபாச நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கும்படி உத்தரவு பிறப்பித்ததற்காக நீதிபதி பி.என்.பிரகாஷ் தன் உத்தரவில் வேதனையும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டம் ஒழங்கு பிரச்னை தொடர்பாக முடிவெடுக்கும் காவல் துறையினரின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இதுபற்றி அதிகாரிகள்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கோவில் விழாக்கள் நடத்துவதாகக் கூறி பொது இடத்தில் இதுபோன்ற ஆபாச நிகழ்ச்சிகளை நடத்த விழா ஏற்பாட்டாளர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனக் கூறி, ஆறு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.