லாக்கப் மரணங்களை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து காவல்துறையினருக்கு  டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

லாக்கப் மரணங்களை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் சமீபமாக லாக் - அப் மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் கைதிகள் இறப்புக்கு, காவல் துறை தரப்பில் கைதிகளின் உடல் நலக்குறைவே காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் உயிரிழக்கும் கைதிகளின் உறவினர்களோ அடித்துக் கொலை செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கின்றனர். இதனைத் தடுக்கும் விதமாகவே டிஜிபி அலுவலகத்தில் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், கைது செய்யப்படுவதற்கு முன் குற்றம் சாட்டப்பட்டவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிதல் வேண்டும். காவலில் வைக்கப்படுவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனைக்கு தேவையான வசதிகள் உள்ள மாவட்ட மருத்துவமனையில் முழுமையாக செய்யப்பட வேண்டும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உண்மையான சோதனையின்றி உடற்தகுதி சான்றிதழ் பெறும் நடை முறையை நிறுத்தி கொள்ள வேண்டும். போலீஸ் நிலையம், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் ஆகியவற்றில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டி ருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.போலீஸ் சித்ரவதை பற்றிய தவறான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். குற்றம் சாட்டப்பட்டவர் கால்-கை வலிப்பு நோய் தொடர்பான வரலாறு குறித்து முழுமையாக சரி பார்க்கப்பட வேண்டும்.

சந்தேக நபர்களை பொதுமக்கள் அடிக்கும்போது, அவரை சம்பவ இடத்திலிருந்து இருந்து நேரடியாக 108 ஆம்புலன்ஸ் அல்லது பிற தனியார் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். அவர்களை போலீஸ் நிலையத்திற்குள் கொண்டு வரவோ அல்லது போலீஸ் காவலில் எடுக்கவோ கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்காக போலீஸ் நிலையத்திற்கு குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு வரக்கூடாது. அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டு சரியாக வேலை செய்வதை உறுதி செய்து கொள்ளவும். குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்கும்போது அவர்கள் கொடுங்குற்றவாளியாக இருந்தால் தவிர அவர்களை விரட்டக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.