சூரிய கிரகணத்தின் போது அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி.. கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 25 ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தின் போது தீர்த்தவாரி நடைபெறும் என்றும் கோயில் நடை அடைக்காமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வருகிற அக்.25-ந் தேதி பகுதி சூரிய கிரகணம் நடைபெறுகிறது. தமிழகத்தில் பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மறுதினம் மாலை 5.10 மணிக்கு தொடங்கி 6.30 வரை சூரிய கிரணம் நீடிக்கும். இதனை வெறும் கண்ணால் மக்கள் பார்க்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி எழுமலையான் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில் நடை சாத்தப்படும் என்றும் பக்தர்களுக்கு தரசனித்திற்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருவண்ணாமலையார் கோவில் அக்னி ஸ்தலம் என்பதால், இங்கு மட்டும் கிரகணத்தின் போது கோவில் நடை அடைக்கப்படுவதில்லை.
மேலும் படிக்க:Diwali: சென்னை விமான நிலையத்தில் நிரம்பி வழியும் பயணிகள்; டிக்கெட் விலை பல மடங்கு உயர்வு!!
அதனால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மரபு படி சூரிய கிரகணத்தின் போது நடை அடைக்காமல் வழக்கம் போல திறந்து இருக்கும். பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் சூரிய, சந்திர கிரகணங்களின்போது கோவிலின் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் 25ம் தேதி சூரிய கிரகணம் மாலை நிகழ்வதால், மாலை 5.10 மணிக்கு கிரகணம் உதய நாழிகையில், கோவில் 4ம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தவாரி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லை விரிவாக்கம்... 1,225 கிராமங்கள் புதிதாக சேர்ப்பு..!