டெங்குவால் தொடரும் உயிரிழப்பு; இன்று மட்டும் 5 பேர் பலி!
தமிழகத்தில் இன்று மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துவதாக அரசு கூறி வந்தாலும், தினமும் சுமார் 10 பேராவது டெங்கு பாதிப்பால் உயிரிழந்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் நாற்றாம்பள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத ஆண் குழந்தை பிரதீ உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் ரித்தீஷ் (8), கிருஷ்ணகிரி மாவட்டம் கொரலநத்தத்தில் சஹானா (5), மதுரை மாவட்டம் ஆனையூரைச் சேர்ந்ந்த நூர்ஜகான் (60) ஆகியோர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர். தஞ்சை, ஊரணிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கவிதா என்பவர் டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.
வழக்கறிஞர் கவிதா உயிரிழந்ததை அடுத்து, தஞ்சையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். டெங்குவைக் கட்டுப்படுத்த அரசு திணறி வருவதாகவும், டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனாலும், டெங்கு காய்ச்சலின் பாதிப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழக அரசு டெங்குவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாது தண்ணீர் தேங்காமல் இருக்கவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தண்ணீர் தேங்குவதை கட்டுப்படுத்த தவறும் பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும், அபராதம் விதித்தும் வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட மத்திய குழு இன்று தமிழகம் வந்துள்ளது. இந்த குழுவிடம், தமிழக அரசு ரூ.256 கோடி நிதி கேட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் நிவாரண உதவிக்காக மத்திய அரசிடம் கேட்டுள்ளது.
டெங்குவைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பொதுமக்களாகிய நாம், பொறுப்பை உணர்ந்து, டெங்கு கொசுக்களை உருவாவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். வீடுகளில், தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்தியும், தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.