"நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல்" - கமிஷனர் அலுவலகத்தில் புகார்!!
நடிகர் விஷாலுக்கு, கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும், கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தயாரிப்பாளர் மணிமாறன், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் சங்க புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிக்கான இடைக்கால தடை நீங்கியதை அடுத்து, கட்டடப் பணிகள் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகின்றன.
நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்த உள்ளதாகவும் நடிகர் விஷால் கூறியிருந்தார்.
நடிகர் சங்க கட்டடத்துக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டு, நீங்கியுள்ள இந்த நிலையில், நடிகர் விஷாலுக்கு இன்று கொலை மிரட்டல் வந்துள்ளது.
விஷாலுக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, தயாரிப்பாளர் மணிமாறன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், நடிகர் விஷாலுக்கு தனபால் என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக விஷாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த தனபால் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த புகாரில் தயாரிப்பாளர் மணிமாறன் கூறியுள்ளார்.