Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும்!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

Cyclone michaung relief Ration shop will be operated in four districts tomorrow  smp
Author
First Published Dec 16, 2023, 4:50 PM IST | Last Updated Dec 16, 2023, 4:50 PM IST

தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதிக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக ரூ.6,000 வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரேஷன் கடை ஊழியர்கள் வீடுவீடாக சென்று டோக்கன் விநியோகிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மிக்ஜாம் புயல் நிவாரண நிதி எந்த பகுதி மக்களுக்கு மற்றும் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்த அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுவதுமாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களிலும் வழங்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய 6 வட்டங்களுக்கும் இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பொதுமக்கள் தரிசனத்துக்கு எப்போது அனுமதி?

இந்த நிலையில், தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வார இறுதியில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இரண்டு வாரங்கள் செயல்பாட்டில் இருக்கும். பணிக்கு செல்லும் குடும்பத்தினர் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு ஏதுவாக ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுகிறது.

மேலும் சிறப்பு விநியோகம் மற்றும் அரசு உத்தரவின்படியும் ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும். அந்த வகையில், மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண தொகைக்கான டோக்கன் வழங்கும் பணிகள் நடந்து வருவதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 17ஆம் தேதி (நாளை) ரேஷன் கடைகள் இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை வருகிற 17ஆம் தேதி (நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள. சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் தொடங்கி நிவாரண நிதி வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios