அன்பால் எனை ஆட்கொண்ட தமிழ்நாடே இந்த பந்தம் தொடரும்...! ஹர்பஜன்சிங் நெகிழ்ச்சி டுவிட்...!
தமிழ் மக்கள் என்மேல் காட்டும் அளவுகடந்த பாசமும் நேசமும் தன்னை வியக்க வைக்கிறது என்றும், அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே இந்த பந்தம் தொடரும் என்று ஹர்பஜன்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூதாட்ட புகார் காரணமாக இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்கி உள்ளன. போட்டி தொடங்க சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், சி.எஸ்.கே. வீரர்கள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் அவர்கள் திறந்த பேருந்தில் சென்னையைச் சுற்றி வந்தனர். அப்போது அவர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சென்னைவாசிகள் என பலர் வரவேற்பு அளித்தனர்.
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள சி.எஸ்.கே. அணி வீரர்கள் தொடர்ந்து நன்றிகள் கூறி வருகின்றனர். சென்னையில் பயணம் செய்தது குறித்தும், தமிழ் மக்கள் குறித்தும், ஹர்பஜனி சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டுக்கு வருகைதந்த நாளில் இருந்து, தமிழ் மக்கள் என்மேல் காட்டும் அளவுகடந்த பாசமும் நேசமும் என்னை வியக்க வைக்கிறது. உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி. அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே... இந்த பந்தம் தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியமாகத் தொடரட்டும் என்று தமிழில் பதிவிட்டுள்ளார். சென்னை
அணியில் தேர்வுசெய்ததில் இருந்து, ஹர்பஜன்சிங் தமிழ் கற்று வருகிறார்.
ஹர்பஜன் டுவிட்டரில் பதிவிட்ட தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப்பாரம்பரியம் என்றும் வரிகள் தனியார் நிறுவனத்தின் விளம்பர வரிகளாகும். இந்த வரிகளை, ஹர்பஜன் பயன்படுத்தியது குறித்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.