விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் கைதான 6 காவலர்களுக்கு வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் கைதான 6 காவலர்களுக்கு வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலக காலனி போலீசார் கடந்த 19 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வந்த விக்னேஷ் என்ற இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதை அடுத்து அவர் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டார். மறுநாள் விசாரணையின் போதே விக்னேஷ் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தரவிட்டார். இதனிடையே விக்னேஷ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.

அதில், விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து, விக்னேஷ் மரணம் தொடர்பாக 9 காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் 10 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து, தலைமை செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில காவலர்கள் கைது செய்யப்பட்ட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அதன்படி தற்போது சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில் மேலும் 4 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர் குமார், ஊர்க்காவல் படை வீரர் தீபக், ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே 2 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் கைது செய்து சிபிசிஐடி நடவடிக்கை எடுத்துள்ளது. எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 6 காவலர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக 2 காவலர்களை சிபிசிஐடி நேற்று கைது செய்தது. விக்னேஷ் இறந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டதை அடுத்து 2 காவலர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். சென்னை தலைமைச் செயலக காலனி காவல்நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆகியோரை சிபிசிஐடி கைது செய்தது. இந்த நிலையில் கைதான 6 காவலர்களுக்கு வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 6 போரையும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பரமசிவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
