தனியார் பாலில் கலப்படம் – ஆதாரத்தை வெளியிட்டார் ராஜேந்திர பாலாஜி
தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் பாலில் ராசாயனம் இருப்பது உறுதி செய்யபட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்வதாகவும், தனியார் பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவதாகவும், கூறி தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி வந்தார்.
இதற்கு பால் முகவர் சங்கம் கடுமையான எதிர்பு தெரிவித்தது. மேலும் பால் கலப்படம் தொடர்பான வழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் எந்த பால் மாதிரியும் பாதுகாப்பற்றது என நிரூபணமாகவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
எனவே ராஜேந்திர பாலாஜியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து உடனடியாக பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர் சங்கத்தின் பொன்னுசாமி கூறியதற்கு அவர் பால் முகவரே அல்ல எனவும், அவரது சங்கம் ஒரு டூப்ளிகேட் சங்கம் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
இதற்கு ராஜேந்திர பாலாஜி உடனடியாக தனது கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் எனவும், இல்லையெனில் சட்டரீதியாக மான நஷ்ட வழக்கு தொடருவேன் எனவும் பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுச்சாமி எச்சரிக்கை விடுத்தார்.
இதைதொடர்ந்து பால் முகவர்கள் சங்கம் அவதூறு வழக்கு தொடர்ந்தால் அதை சட்டப்படி சந்திக்கத் தயார் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் பாலில் ராசாயனம் இருப்பது உறுதி செய்யபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆய்வு முடிவுகள் முழுமையாக வந்தால் இன்னும் சில நிறுவனங்களும் பிரச்சனையில் சிக்கும் எனவும், முதலமைச்சரிடம் கலந்து பேசி பாலில் ரசாயன கலப்பு செய்த நிறுவன்ங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் 1 கோடியே 92 லட்சம் லிட்டர் பால் தேவைப்படுவதாகவும் இதில் 40 லட்சம் லிட்டர் மட்டுமே தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தனியார் நிறுவனங்களின் பாலை சோதனைக்கு அனுப்பி வந்த தகவலையும் ஆதாரத்துடன் வெளியிட்டார்.