அறந்தாங்கி தொகுதியில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்...
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில், அறந்தாங்கி தொகுதியில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி காங்கிரசு கமிட்டி மற்றும் அனைத்து பொது விவசாயிகள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரசு கட்சியின் சமூக ஊடக பிரிவு மாநில தலைவர் எஸ்.டி. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் தர்ம. தங்கவேல், மாநில விவசாய அணி துணைத் தலைவர் சு.செல்வரெத்தினம், மாநில விவசாய அணிச்செயலாளர் சி. மகாலிங்கம், தெற்கு மாவட்ட விவசாய அணித் தலைவர் எம்.போகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "அறந்தாங்கி தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்க வேண்டும்,
அறந்தாங்கி தொகுதி விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும்,
பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்,
அறந்தாங்கி தொகுதியில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும்,
ஆவுடையார்கோவிலில் உள்ள பேருந்து நிலையத்தை உடனே திறக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அறந்தாங்கி நகர தலைவர் கே.வீராச்சாமி, வட்டார தலைவர்கள் ஆவுடையார்கோவில் கூடலூர் முத்து, மணமேல்குடி நிலையூர் சரவணன், கட்சி நிர்வாகிகள் என்.ஜி.என்.மோகன், தேவதாஸ்காந்தி, முத்துராமலிங்கம், யோகேஸ்வரன், பாலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.