காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் - திமுக இளைஞரணி தீர்மானம்...
கரூர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிப்பது என்று தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு இளைஞர் அணி மாநிலச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெள்ளக்கோவில் சாமிநாதன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அன்பரசன் வரவேற்று பேசினார். மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில விவசாய அணிச் செயலாளர் சின்னசாமி உள்பட மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய, மாநில அரசின் மெத்தன போக்கிற்கும், மேலாண்மை வாரியம் அமைக்காததற்கும் கண்டனம் தெரிவித்தல்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
சங்கிலி பறிப்பு, பாலியல் வன்முறை, காவலாளர்களின் அத்துமீறல்கள், மக்கள் கூட்டத்தில் தடியடி, கைது போன்ற நடவடிக்கை ஜனநாயகத்தை கேள்விக்குறியாக மாற்றிவிட்டது.
எதையும் கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தல்.
பெரியார், அண்ணா சிலைகளை சேதப்படுத்துவதை தி.மு.க. இளைஞர் அணி எதிர்கொள்ளும்" என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தின் இறுதியில் துணை அமைப்பாளர் சசிக்குமார் நன்றித் தெரிவித்தார்.