சென்னையில் பிரபல நகைக்கடை உரிமையாளர் கைது - ரூ.20 கோடி வரி ஏய்ப்பு...
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ. 20 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததையடுத்து சென்னையில் பிரபல நகை கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை திநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்று பல வருடங்களாக கலால் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து டெல்லியில் உள்ள கலால் வரித்துறை அதிகாரிகள் சென்னை மண்டல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால் மண்டல அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், கடந்த வருடத்தில் மட்டும் சென்னையில் உள்ள நகை கடையில் ரூ. 20 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது.
இந்த கடை தொடர்பான உரிமையாளருக்கு தமிழகம் முழுவதும் பல நகை கடைகள் உள்ளன. இதனால் மற்ற கடைகளிலும் வரி ஏய்ப்பு செய்துள்ளாரா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.