பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவன் சக்தீஷ்வர், உடல் எடையைக் குறைக்க மூன்று மாதங்களாக ஜூஸ் மட்டும் குடித்து வந்ததால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன். இவர் சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சக்தீஷ்வர் (17). இவர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை அடுத்து பொறியியல் கல்லூரியில் சேர தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

அதாவது சக்தீஷ்வர் உடல் பருமனால் சிரமப்பட்டு வந்துள்ளார். கல்லூரி செல்வதால் உடல் பருவமனை குறைப்பதற்காக யூடியூப் வீடியோவை பார்த்து கடுமையான டயட்டை மேற்கொண்டு வந்துள்ளார். சுமார் 3 மாதங்களாக ஜூஸ் மட்டுமே குடித்துவிட்டு, உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து ஜூஸ் குடித்து வந்ததால் சளித் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதனால் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், சக்தீஷ்வருக்கு நேற்று காலை கடுமையான சளித் தொல்லை ஏற்பட்ட நிலையில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சக்தீஷ்வரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த மூன்று மாதங்களாக உணவு சாப்பிடாமல் பழ ஜூஸ் மட்டும் குடித்து வந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவரின் கண்களை பெற்றோர் தானமாக அளித்துள்ளனர்.