காமராஜர் மதிய உணவு திட்டம் உள்ளிட்ட பல கல்வித் திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். 

தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், பெருந்தலைவர், கர்ம வீரர், கல்வி கண் திறந்தவர் என பல்வேறு பெயர்களுக்கு சொந்தக்காரர். அவரது ஆட்சி காலத்தில் மக்களின் நலனுக்காகவும், பள்ளி மாணவர்களுக்காகவும் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர். இந்நிலையில் அவரது பிறந்தநாளான இன்று அதாவது ஜூலை 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காமராஜர் பிறந்தநாள்

காமராஜரின் சிறப்பும், அவரின் ஆளுமை, திட்டங்கள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு விதமான பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் காமராஜர் 125வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புகழராம் சூட்டி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் புகழ் வணக்கம்

இதுதொடர்பாக காமராஜர் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்: அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம். நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம் என தெரிவித்துள்ளார்.

சீமான்

மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து இலவச மதிய உணவு கொடுத்து தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கடவுள். மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி, வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு 33,000 நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண்மை செழிக்க வழிசெய்த ஆகச்சிறந்த ஆட்சியாளர்.

ஆவடி கனரக ஆலை, சேலம் உருக்கு ஆலை, நெய்வேலி நிலக்கரித் திட்டம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை என 18 க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட புரட்சியாளர். இத்தனை சாதனைகளும் செய்த 9 ஆண்டுகால ஆட்சியில், மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்ற வில்லை. 6 முறை கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறைவாசம், 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர், 9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர், 8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர், 3 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரசு கட்சி தலைவர், 2 பிரதமர்களை உருவாக்கிய ஒற்றைப் பெருந்தலைவர்.

பதவிகள் பல வகித்தபோதும் ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை. கோடி கோடியாக சொத்து சேர்க்கவில்லை. குடும்பத்து வாரிசுகளுக்குப் பதவி கொடுக்கவில்லை. உண்மையும் நேர்மையுமான ஒப்பற்ற தூய ஆட்சி தந்து தமிழ்நாட்டினை முன்னேற்றிய தன்னிகரில்லாத் தலைவர்.

நாட்டின் விடுதலைக்காகப் போராடி 3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம் அவரைப்போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம். எழுத்தறிவித்த இறைவன். நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.