- Home
- Tamil Nadu News
- அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு வந்தாச்சு! யாருக்கு எவ்வளவு?
அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு வந்தாச்சு! யாருக்கு எவ்வளவு?
தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவித்துள்ளது. கூடுதல் விலைக்கு மது விற்ற 451 ஊழியர்களுக்கு ரூ.1,000 மட்டுமே உயர்வு.

தமிழக அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த சில நாட்களாக தமிழக அரசு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது. அரசு ஊழியர்களை கவரும் விதமாக அவர்களின் பல நாள் கோரிக்கைகளை ஏற்று பல முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதாவது அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தியது, அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனம்
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவன மதுக்கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு, கடந்த ஏப்ரல் முதல் தலா, ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதம் கடந்தும், சட்டப்பேரவையில் அறிவித்தப்படி ஊதிய உயர்வை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
டாஸ்மாக் நிர்வாகம்
இந்நிலையில், ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
சம்பளம் உயர்வு
அந்த வகையில், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்து விதி மீறலில் ஈடுபட்ட 451 ஊழியர்களுக்கு ரூ.1,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் மாதம் முதல் முன் தேதியிட்டு இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.