பாதுகாப்பு உபகரணங்கள், தளவாட பொருள்கள் கேட்டு துப்புரவுத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்...
தருமபுரி
பாதுகாப்பு உபகரணங்கள், தளவாட பொருள்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு, சி.ஐ.டி.யு. துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கப் பொதுச்செயலர் ஆர்.செல்வம் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சி.குட்டியப்பன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.ரத்தினகுமார், சிஐடியு மாவட்டச் செயலர் சி.நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "குறைந்தபட்ச ஊதிய அரசாணையை அமல்படுத்த வேண்டும்.
மக்கள் தொகை பெருக்கத்துகேற்ப, புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
விடுமுறை நாள்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்பு அமைத்துதர வேண்டும்.
பாதுகாப்பு உபகரணங்கள், தளவாட பொருள்கள் வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.