புதுக்கோட்டை மாவட்டம் வடிகாட்டில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு வீடு எரிக்கப்பட்டு, பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதை அடுத்து பதற்றம் ஏற்பட்டுள்ளதை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

புதுக்கோட்டை மாவட்டம் வடிகாட்டில் நேற்றிரவு இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக குடியிருப்புப் பகுதிகளுக்கு தீ வைப்பு, 5 பேருக்கு அரிவாள் வெட்டு, 4 காவலர்கள் மீது தாக்குதல் என செய்திகள் வெளியான நிலையில் இதனை புதுக்கோட்டை காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்

இது தொடர்பாக புதுக்கோட்டை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: எக்ஸ் வலைதளத்தில் வடகாடு காவல் சரகத்தில் முத்துராஜா சமூகத்தினருக்கும் SC/PR தரப்பினருக்கும் இடையே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் தலீத் மக்கள் குடியிருக்கும் பகுதியில் வீடுகளுக்கு தீவைப்பு எனவும், 5 பேருக்கு அரிவாள் வெட்டு, பேருந்து கண்ணாடிகள் உடைப்பு, காவல்துறையினர் 4 பேர் காயம் மற்றும் காவல் ஆய்வாளருக்கு தலையில் வெட்டுக்காயம் என செய்தி பரவி வருகிறது.

இருதரப்பினர் இடையே மோதல்

மேற்படி சம்பவமானது, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி உட்கோட்டம், வடகாடு காவல் சரகத்திற்குட்பட்ட வடகாடு இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே 05.05.25-ம் தேதி சுமார் இரவு 09.30 மணியளவில் முத்துராஜா சமூகத்தைச் சோந்த நபர்களுக்கும், SC/PR சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்குமிடையே யார் முதலில் பெட்ரோல் போடுவது என வாய்தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் பதிலுக்கு பதில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி SC/PR தரப்பினர் அவர்களது குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற நிலையில், முத்துராஜா சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு இருசக்கர வாகனங்களில், SC/PR தரப்பினரை பின்தொடர்ந்து சென்று மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். 

அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு

இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கூரை வீடு எரிக்கப்பட்டும், அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மேற்படி சம்பவமானது குடிபோதையில் இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் என விசாரணையில் தெரியவருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

எனவே X வலைதளத்தில் இரு சமூகத்தினர் இடையே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் தலீத் சமூகத்தினர் குடியிருக்கும் பகுதியில் வீடுகளுக்கு தீவைப்பு, 5 பேருக்கு அரிவாள் வெட்டு, காவல்துறையினர் 4 பேர் காயம் மற்றும் காவல் ஆய்வாளருக்கு தலையில் வெட்டுக்காயம் என்று பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், மேலும் இவ்வாறு வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது. 

டாஸ்மாக் கடைகள் மூடல்

இதனிடையே வடகாடு மற்றும் அதனை சுற்றியுள்ள 3 மதுபானக்கடைகளை இன்று மூட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அப்பகுதி தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் வடகாடு வழியாக செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.