தமிழக எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீனக் கப்பல் - துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அதிர்ச்சித் தகவல்
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத சீன கப்பல் விரட்டி அடிக்கப்பட்டுள்ளது.
அருணாசலப்பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்திய எல்லைக்குள் சீன கொடியை நாட்டிச் செல்வதும், அத்துமீறி நுழைவதும், தொடர் கதையாக நீடித்து வருகிறது. சமீபமாக அருணாச்சலப்பிரதேசத்தின் 6 பகுதிகளுக்கு சீனா தன்னிச்சையாக பெயர் சூட்டியது.
இவ்விவகாரம் நீருபூத்த நெருப்பாக தொடர்ந்து கணன்று கொண்டிருக்கும் நிலையில், இந்திய கடல் எல்லைக்குள் அடையாளம் தெரியாத சீன கப்பல் அத்துமீறி நுழைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக எல்லைப் பகுதிக்குள் பிரவேசித்த அக்கப்பலை கடலோர காவல்படையினர் விரட்டி அடித்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடற்படையினர் வெளியிடவில்லை. உரிய அனுமதி இல்லாமல் சீன கப்பல் நுழைந்தது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.