மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள்…!!! - பிளஸ் 2 தேர்வில் 26 பேர் சாதனை…!!!
சமூக நலத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறையினர், 18 வயதுக்குள் அடங்கிய சிறுவர்களை வேலைக்கு அனுப்புவதை தடுத்து, அவர்களை மீட்டு வருகின்றனர். அதே நேரத்தில், அவர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டட 26 பேர், நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 1000 மதிப்பெண்ணுக்கு அதிகம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
வீட்டு வேலை, ஆடு-மாடு மேய்த்தல் மற்றும் பல்வேறு இடங்களில் வேலை பார்த்து கொண்டிருந்த குழந்தை தொழிலாளர்களை மீட்டு பள்ளிகளில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவர்களில், கடந்த 2016 - 17ம் கல்வியாண்டில் மட்டும் மொத்தம் 277 மாணவ - மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இவர்களில் 245 மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி சதவீதம் 89 சதவீதம் ஆகும்.
மேலும், நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 26 மாணவ - மாணவிகள் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். குழந்தை தொழிலாளராக மீட்கப்பட்டு, பிளஸ் 2 பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளின் விவரம் வருமாறு:
1) செ.மோகன்ராவ் - 1157 (தர்மபுரி மாவட்டம், பழரச கம்பெனியில் இருந்து மீட்கப்பட்டவர்),
2) ப.வம்சி கிருஷ்ணா - 1127 (காஞ்சிபுரம் மாவட்டம், வீட்டு வேலை)
3) பொ.கோகுல் - 1122 (ஈரோடு மாவட்டம், ஆடு மாடு மேய்த்தல்)
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.