முதலமைச்சர் ஸ்டாலின் இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தமிழிசை சௌந்தரராஜன் மும்மொழியில் வாழ்த்து தெரிவித்ததற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் திமுகவின் நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தினார்.
தமிழிசைக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி : தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். அனைத்து கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிவருகிறார். இன்று தனது 7வது பகுதியில், என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட்டமாக மட்டுமில்லாமல், இனம் - மொழி காப்பதற்கும், மாநில உரிமைகளை மீட்பதற்குமான போராட்டமாக முன்னெடுக்க வேண்டும் என்று காணொலி வாயிலாகக் கோரிக்கை வைத்தேன்.
பா.ஜ.க. நிர்வாகியான அன்பு சகோதரி டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் அவர்கள் எனக்கு ‘மும்மொழி’யில் வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார். மும்மொழித் திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை விளக்கி என்னுடைய பிறந்தநாள் செய்தியை நான் வெளியிட்டிருந்த நிலையில், சகோதரி அவர்கள் மும்மொழியில் வாழ்த்தி தன் அன்பையும், தன் இயக்கத்திற்குரிய ‘பண்பையும்’ காட்டியிருக்கிறார்.

சகோதரி தமிழிசையின் வாழ்த்துச் செய்திக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘இந்தி’ இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு. தமிழ் - ஆங்கிலம் இரண்டு மொழிகளில் அமைந்த வாழ்த்துக்குப் பிறகு, தெலுங்கு மொழியில் வாழ்த்தியிருக்கிறார். உங்களில் ஒருவனான எனக்கு தெலுங்கு தெரியாது. நான் படித்ததும் இல்லை. தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த சகோதரி தமிழிசை அவர்கள் தெலுங்கு மொழியை அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், அவர் தெலுங்கு மொழியைப் பள்ளிப் பருவத்திலேயே படித்து அதனைத் தெரிந்துகொள்ளவில்லை. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் பணியாற்றியதால், பழக்கத்தின் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறார்.
இதிலிருந்தே, மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை என்பதையும், தேவைப்படுகிறவர்கள் அதனைப் புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்கிற திராவிட இயக்கத்தின் கொள்கை வழியிலான தமிழ்நாட்டின் உணர்வையும் எனக்கானப் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள சகோதரி தமிழிசைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்ன இருந்தாலும், அவர் நம் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் ‘தகைசால் தமிழர் விருது’ பெற்ற இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களின் திருமகள் அல்லவா! சகோதரி தமிழிசை அவர்கள் தெலுங்கு எழுத்துகளில் வாழ்த்துச் செய்தியை எழுதக்கூட அவசியமில்லை என்கிற அளவிற்கு அவருடைய பதிவிலேயே இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அறிய முடிகிறது.

என் பிறந்தநாளில் தெலுங்கிலும் வாழ்த்துச் சொன்ன சகோதரி தமிழிசை அதனைத் தன் விருப்பத்தின் அடிப்படையில் செய்திருந்தால் எனக்கு மகிழ்ச்சியே. நவீன அறிவியல் தொழில்நுட்பத்தைக் கையாண்டுள்ள அவரைப் பாராட்டுவதுடன், மும்மொழி என்ன இன்னும் எத்தனை மொழிகளில் வேண்டுமானாலும் வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம். ஒருவர் விரும்புகிற எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகளல்ல. எந்த மொழியையும் எங்கள் மீது திணிக்காதீர்கள் என்பதைத்தான் அன்று முதல் இன்று வரை தெளிவாகச் சொல்கிறோம். ஆறறிவு கொண்ட அனைவருக்கும் இது புரிகிறது. ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கு மட்டும் ஏன் புரியவில்லை? புரியாமல் இல்லை. புரியாதது போல பாசாங்கு செய்கிறார்கள். அவர்களின் நோக்கம் ஏதேனும் மூன்று மொழி என்பதல்ல.
தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும் இந்தி கற்றுத்தரப்படுகிறது என்று விமர்சனம் செய்கிறார்கள். பரம்பரை பரம்பரையாகவே கல்வி வியாபாரம் செய்யும் பா.ஜ.க.குடும்பத்தினர் பற்றிய பட்டியலை வெளியிட்டு பதிலுக்குப் பதில் பேசுவது நமது நோக்கமல்ல. உரிய அனுமதியுடன் எந்தக் கட்சியை சார்ந்தவர்களும், எந்தவொரு கட்சியையும் சாராதவர்களும் பள்ளிக்கூடங்களை நடத்த முடியும். தி.மு.க.வினரில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளை நடத்துகிறவர்களும், ஒன்றிய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை நடத்துகிறவர்களும் உரிய அனுமதியுடன்தான் நடத்துகிறார்கள். தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்றால் அதற்கு காரணம் ஒன்றிய அரசின் கல்விக்கொள்கைதானே தவிர, தி.மு.கவினரோ வேறு எந்தக் கட்சியினரோ தனிப்பட்ட முறையில் காரணமாக மாட்டார்கள்.
![]()
தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் எதிலும் மும்மொழித் திட்டம் கிடையாது. இந்தி மொழி என்பது கட்டாயமுமில்லை. அந்த மொழியில் தேர்வு நடத்தப்படுவதுமில்லை. இது தெரிந்திருந்தும் அரசியல் நோக்கத்துடன் பேசும் பா.ஜ.க.நிர்வாகிகள், “தனியார் பள்ளியில் படிக்கும் பணக்கார குடும்பத்து மாணவர்களுக்கு கிடைக்கும் இந்தி படிக்கும் வாய்ப்பு, ஏழை மாணவர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை?” என்று ஏதோ தமிழ்நாட்டு ஏழை மாணவர்கள் மீது இவர்களுக்கு மட்டும்தான் அக்கறை உள்ளது போல வேடம் போடுகிறார்கள். பா.ஜ.க. ஆட்சி செய்கின்ற இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளைவிட, தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லாத-இருமொழிக் கொள்கை வழியிலான அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரம் உயர்ந்தே இருப்பதை ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன.
தற்போது 6000 மையங்களுடன் தென்மாநிலங்கள் முழுவதும் இந்தி பிரச்சார சபா இயங்கி வருகிறது. தென்னிந்தியர்கள் இந்தியைக் கற்க தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா நிறுவப்பட்டதுபோல, வடஇந்தியாவில் தென்னிந்திய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள உத்தர பாரத தமிழ் பிரச்சார சபாவையோ, திராவிட பாஷா சபாவையோ நிறுவ முடிந்ததா?

வள்ளுவர் சிலையை கங்கை கரையில் நிறுவுவதாக சொல்லி குப்பை மேட்டில் போட்டவர்களா தமிழ் கற்றுத் தருவதற்கான அமைப்பை நிறுவப் போகிறார்கள்? கோட்சே வழியைப் பின்பற்றும் இயக்கத்தினர் காந்தியின் நோக்கத்தை ஒரு போதும் நிறைவேற்ற மாட்டார்கள். தமிழ்நாட்டில் தற்போது ஓடும் ரயில்களுக்கு கூட இந்தி-சமஸ்கிருதப் பெயர்களை வைப்பவர்கள் ஒன்றிய பா.ஜ.க ஆட்சியாளர்கள். தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் அவர்களின் ரகசியத் திட்டம். அதை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டதுதான் திராவிட இயக்கம் என முதலமைச்சர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
