சந்திரயான் செய்தி சேகரிக்க சென்று சாலைவிபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ஐந்து லட்ச ரூபாய் நிவாரண நிதி அறிவித்தார்
சாலை விபத்தில் ஒளிப்பதிவாளர் மரணம்
சந்திரயான் விண்கலம் நிலவில் இறங்கியதை தொடர்பான நேரலை செய்திக்காக திருவனந்தபுரம் சென்றிருந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் செய்தி முடிவடைந்த பிறகு நெல்லைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பத்திரிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று (23-8-2023) இரவு நடந்த சாலை விபத்தில் திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் திரு சங்கர் (வயது 33) என்பவர்

நிவாரண உதவி அறிவித்த முதலமைச்சர்
சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.மேலும் இவ்விபத்தில்படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். இளம் வயதில் உயிரிழந்த தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் திரு சங்கர் அவரது குடும்பத்தினருக்கு உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிநியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
சந்திரயான் செய்தி சேகரிக்க சென்ற பிரபல தொலைக்காட்சி கேமராமேன்..! விபத்தில் சிக்கி பலியான சோகம்
