chidambaram relative death subramaniyan swamy demands investigation
திருப்பூரில் ஹோட்டல் அபகரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்பட்ட ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் சகோதரி பத்மினி நேற்று திடீரென மரணமடைந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அடுத்த வாரம் விசாரிக்க இருக்கும் நிலையில்,பத்மினி மரணம் அடைந்து இருப்பது குறித்து தமிழக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த டாக்டர் கதிர்வேல் என்பவர் ‘கம்போர்ட் இன்’ எனும்ஹோட்டலை கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு, ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் சகோதரிபத்மினி என்பவர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து கதிர்வேலின்ஹோட்டலை அபகரித்து விட்டார் என அவர் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக சி.பி.ஐ.க்கும் கதிர்வேல் புகார் அனுப்பி இருந்தார். ஆனால், அந்த புகாருக்கு சி.பி.ஐ. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் கதிர்வேல் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “என்னுடைய ஹோட்டலுக்காக ஐஓபி வங்கியிடம் கடன் பெற்று இருந்தேன். அந்த நிலுவைக் கடன் தொகையையும் செலுத்திவிட்ட பிறகும், வங்கி ஹோட்டலை ப.சிதம்பரத்தின் உறவினர் பத்மினிக்கு அளிக்க ‘மாதிரி ஏலம்’ நடத்தினர். வங்கி தன்னை ஏமாற்றி ஏலத்தை நடத்தி ஹோட்டலை ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்தின் சகோதரி பத்மினிக்கு ரூ.4.5 கோடி என்ற மலிவு விலைக்கு ஒதுக்கியது. இது நியாயமில்லாதது’’ எனத் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் முறைப்படி விசாரணை நடத்தி, ஜூலை 25-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கடந்த மாதம் 26-ந்தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பத்மினியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுத்த வாரம் விசாரணை நடத்த முடிவு செய்து இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் சிதம்பரத்தின் உறவினர்பத்மினி நேற்று திடீரென மரணமடைந்தார்.
இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி, “ திருப்பூர் ஹோட்டல் அபகரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரும், ப.சிதம்பரத்தின் உறவினருமான பத்மினி நேற்று திடீரென மரணமடைந்துள்ளார். அவரின் மரணம் குறித்து தமிழக போலீசார் விசாரணை நடத்த வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.
