வேறொருவருடன் திருமணமா...! புதுமணப்பெண்ணை தாக்கிய காதலன் கைது...!
அடுத்த மாதம் திருமணம் நடைபெறும் நிலையில் புது மணப்பெண்ணை வீட்டுக்குள் புகுந்து கடுமையாக தாக்கிய காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அம்பத்தூரில் நடந்துள்ளது.
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ப்ரனிதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இவரது வீட்டுக்கு புகுந்த இளைஞர் ஒருவர் ப்ரனிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த இளைஞர், ப்ரனிதாவை தாக்கியுள்ளார்.
படுகாயமடைந்த ப்ரனிதா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ப்ரனிதாவை தாக்கிய இளைஞர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ப்ரனிதாவும் நவீனும் ஒரே கல்லூரியில் பயின்றுள்ளனர். அப்போது இருவரும் பழகியுள்ளனர். நவீன், ப்ரனிதாவை காதலித்துள்ளார்.
இந்த சமயத்தில்தான் ப்ரனிதாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. அதை நவீனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடுத்த மாதம் ப்ரனிதாவுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
இதனை அறிந்த நவீன், சம்பவம் நடந்த அன்று பைக்கில் ப்ரனிதா வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு ப்ரனிதாவிடம் தகராறு செய்துள்ளார். ஆத்திரத்தில் வீட்டில் உள்ள பொருட்களையும் அவர் அடித்து நொறுக்கியுள்ளார். இதன் பிறகு ப்ரனிதாவையும் நவீன் தாக்கியுள்ளார். இதனால் நவீனை கைது செய்துள்ளோம். நவீன் பி.எச்.டி படீத்து வருகிறார்.
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடியதோடு, புது மணப்பெண்ணையும் தாக்கியதால் நவீனை கைது செய்துள்ளோம் என்றும் போலீஸ் தரப்பில் கூறுப்படுகிறது.