சீமானுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீமான் மிரட்டியதால் விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது. 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராகி இருந்த சீமான், தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ''விஜயலட்சுமி 2011ம் ஆண்டு சீமானுக்கு எதிராக அளித்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதேபோல் 2023ம் ஆண்டு கொடுத்த புகாரையும் விஜயலட்சுமி வாபஸ் பெற்றுக் கொண்டார்'' என்று சீமான் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில் காவல்துறை தரப்பில், ''கடந்த 2008ம் ஆண்டு சீமானும், விஜயலட்சுமியும் கோயிலில் மாலை மாற்றிக் கொண்டுள்ளனர். சீமான் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததால் தான் விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றுள்ளார். ஆகையால் இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது'' என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கடந்த 19ம் தேதி''விஜயலட்சுமி சீமான் மீதான வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்றரீதியில் இந்த வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது'' என்று கூறி சீமான் மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டார். மேலும் சீமான் மீதான வழக்கை 12 மாத காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முழு விவரம் இன்று வெளியாகியுள்ளது. அந்த தீர்ப்பில், ''சீமானுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதனை தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது. மிரட்டலின் காரணமாகத் தான் சீமான் மீதான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார். வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள், சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது. 

சீமானின் வற்புறுத்தலினால் 7 முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளார் எனவும் விஜயலட்சுமியிடம் இருந்து பெருந்தொகையை சீமான் பெற்றுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை ஆராய்ந்தபோது விஜய லட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை. குடும்ப பிரச்னை, திரைத்துறை பிரச்னையால் சீமானை விஜய லட்சுமியின் குடும்பத்தினர் அணுகியுள்ளனர். அப்போது, திருமணம் செய்வதாகக் கூறி விஜய லட்சுமி உடன் சீமான் உறவு வைத்துள்ளார். பின்னர் திருமணம் செய்ய மறுக்கவே, விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்'' என்று கூறப்பட்டுள்ளது.