Asianet News TamilAsianet News Tamil

சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டி: வீண் விரயமா ரூ.30 கோடி?

சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டிக்காக ஏற்கனவே ரூ.30 கோடி செலவிடப்பட்ட நிலையில், அப்போட்டி இருங்காட்டுக்கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது

Chennai Formula 4 Night Race shifted to irungattukottai as govt already spent nearly rs 30 crores smp
Author
First Published Dec 16, 2023, 2:46 PM IST | Last Updated Dec 16, 2023, 2:47 PM IST

ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் போட்டியானது கடந்த 9, 10ஆம் தேதிகளில் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்ட இந்த போட்டி, மிக்ஜாம் புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டியானது இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழில்முறை பந்தய சர்க்யூட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே  தீவுத் திடலை சுற்றியுள்ள பகுதிகளில் போட்டியை நடத்தும் பொருட்டு, சுமார் ரூ.30 கோடியை மாநில அரசு செலவு செய்து விட்டது.

இப்போட்டியை நடத்த மொத்தம் ரூ.40 கோடி செலவழிக்க மாநில அரசு உறுதி அளித்திருந்த நிலையில், போட்டி நடத்தும் உட்கட்டமைப்புக்காக சுமார் ரூ.30 கோடி ஏற்கனவே செலவழிக்கப்பட்டு விட்டது. தற்போது போட்டி அப்பகுதியில் நடைபெறாத காரணத்தால் செலவிடப்பட்ட இந்த தொகை வீணாகியுள்ளது. பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுக்க முடியாது என்ற நிலையில், சுமார் ரூ.7-8 கோடி அளவிலான பொருட்களை மீட்டெடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

போட்டிக்காக திட்டமிடப்பட்ட தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகள் தற்போது கைவிடப்பட்டுள்ளன. பேரிகார்டுகள், சேதமடைந்த மீடியன்கள், பாதி தூரத்துக்கு சீரமைக்கப்பட்ட, சீரமைக்கப்படுவதற்கான தோண்டப்பட்ட சாலைகள் என அப்பகுதி  காட்சியளிக்கிறது.

விளம்பரம், பர்வையாளர்கள் கேலரிகளுக்கான குத்தகை, தடுப்புகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், தெருவிளக்குகள், சாலைகள் மறுசீரமைப்பு என சுமார் ரூ.30 கோடி செலவிடப்பட்டுள்ளது. பர்வையாளர்கள் கேலரிகள், விஐபி ஓய்வறைகள் போன்றவற்றை அரசாங்கம் குத்தகை விட்டது. அந்த பணத்தை திரும்பப் பெற இயலாது. இருப்பினும், ரூ.8 கோடி வரை மீட்டெடுக்க முயற்சிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

“ரூ.8 கோடி வரை மீட்க முயற்சித்து வருகிறோம். முன்பதிவு தொடங்கியவுடன் பெரும்பாலான ஸ்டாண்டுகள் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டன. இந்நிகழ்ச்சி நடந்திருந்தால், அது ஒரு பெரிய காட்சியாக இருந்திருக்கும். இன்னும், மக்கள் சாலைகளைப் பயன்படுத்துகிறார்கள், மற்ற உள்கட்டமைப்புகளுக்கு செலவிடும் பணம் வீணாகாது.” என இந்த நிகழ்வோடு தொடர்புடைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

காங்கிரஸின் பொது நிதி திரட்டுதல் திட்டம்: வம்சத்துக்கான நன்கொடை - பாஜக கடும் தாக்கு!

சிவானந்தா சாலை, காமராஜர் சாலை, கொடிப் பணியாளர் சாலை, அண்ணாசாலையின் சில பகுதிகளை ஏற்கனவே இருந்த நல்ல சாலைகளை தோண்டி, ரூ.7 கோடி மதிப்பில் அதனை சென்னை மாநகராட்சி மீண்டும் சீரமைத்தது. பெரும்பாலான இடங்களில் மீடியன், தெருவிளக்குகளையும் மாநகராட்சி அகற்றியது.

தவறான திட்டமிடல் தேவையற்ற செலவுக்கு வழிவகுத்ததாக சத்யபாமா பல்கலைக்கழகத்தின் நெடுஞ்சாலைத்துறை பேராசிரியர் சம்பத் குமார் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய நிகழ்வுகள் ஜூலை, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் என வறண்ட மாதங்களில் நடத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாலைகள் இப்போது நன்றாக இருந்தாலும், நிகழ்வுக்கு முன் அவர்கள் FIA சர்வதேச சான்றிதழைப் பெற வேண்டும். எனவே, அந்த நேரத்தில் அதன் தேய்மானத்தின் அடிப்படையில் சாலைகளை மீண்டும் சரி செய்ய அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார்.

சாலைகளை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். போட்டி நடைபெறும் போது சில உள்கட்டமைப்புகள் மீண்டும் பயன்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். “இங்கு வீண்விரயம் எதுவும் இல்லை” எனவும் அவர் கூறியுள்ளார். சிவானந்தா சாலையில் பந்தய நிகழ்வுகளுக்கு வாங்கப்பட்ட தெருவிளக்குகள், கம்பங்கள் போன்ற தடுப்புகளை பயன்படுத்தவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios