சிறுபாக்கம்
நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திட்டக்குடி தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றும் வகையில் கட்சி பணி செய்ய வேண்டும் என்று திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறுபாக்கம் அருகே மங்களூரில் தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் சேகர் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் பொன்முடி, சின்னசாமி, குமணன், திருவள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கணேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில், தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை நியமனம் செய்த தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் தி.மு.க. பொதுக்குழுவுக்கு நன்றி தெரிவிப்பது, 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டிப்பது, நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திட்டக்குடி தொகுதியை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றும் வகையில் கட்சி பணி செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தாமதமின்றி நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நிர்வாகிகள் பாண்டுரங்கன், அமிர்தலிங்கம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சின்னசாமி, இலட்சுமி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
