பட்டாசு கடைகளுக்கான உரிமத்தை புதுப்பிப்பதில் மாற்றம் வேண்டும் - விற்பனையாளர்கள் மனு...
தேனி
பட்டாசு கடைகளுக்கான உரிமம் புதுப்பித்தல் நடைமுறையில் பிறமாவட்டங்கள்போல மாற்றம் செய்ய வேண்டும் என்றுபட்டாசு விற்பனையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தேனி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், "தேனி மாவட்டத்தில் சுமார் 70 பேர் பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற்று, அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பாதுகாப்பான முறையில் பட்டாசு விற்பனை செய்து வருகிறோம்.
சில்லறை விற்பனை உரிமத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து வருகிறோம். இதனால் எங்களுக்கு அசவுகரியங்கள் ஏற்படுகிறது. புதுப்பித்தல் தாமதப்படுத்தப்படும்போது, சரக்கு கொள்முதல் செய்ய தாமதம் ஏற்பட்டு, விலை கடுமையாக உயர்ந்து விடுகிறது.இதனால், நஷ்டம் அடைகிறோம்.
தமிழகத்தில், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையும் உரிமம் புதுப்பித்து வழங்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் உரிமம் புதுப்பித்து வழங்கப்படுவதால், எங்களோடு சேர்த்து அதிகாரிகளும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
எனவே, எங்களின் உரிமத்தை மூன்று ஆண்டுகளுக்கோ, ஐந்து ஆண்டுகளுக்கோ புதுப்பித்து வழங்க வேண்டும். எனவே, பிற மாவட்டங்கள்போல் உரிமம் புதுப்பித்தல் நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.
அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க்ப்படும் என்று உறுதியளித்தார்.