தமிழக அரசு புற்றுநோய் சிகிச்சை மற்றும் கருப்பை வாய் புற்றுநோயை அகற்ற முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, HPV தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழக சட்டசபையில் நிதி அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது புற்றுநோய் சிகிச்சை மற்றும் கருப்பை வாய் புற்றுநோயை அறவே அகற்ற முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் புற்றுநோயினால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று எனவே. தரமான புற்றுநோய் சிகிச்சை மற்றும் உரிய பராமரிப்பு சேவைகளை அனைவருக்கும் வழங்கிட தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது. இக்குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை மாநில அளவிலான முதன்மை புற்றுநோய் மையமாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தரம் உயர்த்தி, உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை, நோய் ஆதரவு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை 800 படுக்கைகளுடன் கூடிய, தன்னாட்சி பெற்ற மையமாகச் செயல்படும் வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 120 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். நவீன நோய் கண்டறியும் முறைகளைக் கையாண்டு, ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் கண்டறிதலை அறிமுகப்படுத்திட இடைநிலை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்குத் தேவையான நவீன மருத்துவக் கருவிகள் மற்றும் மனிதவளம் ஆகியவற்றை 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த மூன்று ஆண்டுகளில் வழங்கிட அரசு திட்டமிட்டுள்ளது.
கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கவும், தமிழ்நாட்டில் அந்நோயினை அறவே அகற்றிடவும், HPV (Human Papilloma Virus) தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென, 2025-26 ஆம் ஆண்டில் 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். மேலும் அனைத்து மகளிரும் பயன்பெறும் வகையில் அவர்களது வசிப்பிடங்களுக்கு அருகில் சென்று நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் முக்கிய புற்றுநோய்கள் மற்றும் இருதய நோய் ஆகிவற்றைக் கண்டறிவதற்கான சோதனைகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்குதல் ஆகிய பல்வேறு சேவைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கிட 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெருகிவரும் தொற்றாநோய்களின் பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக மக்களைத் தேடி மருத்துவம் எனும் மகத்தான திட்டத்தின் மூலம் பயனாளிகளின் இல்லங்களுக்கே சென்று, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இதுவரை 2 கோடியே 20 இலட்சம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. தொற்றாநோய்களைக் கட்டுப்படுத்துவதில் முதன்மையான மற்றும் சிறப்பான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தியதற்காக ஐ.நா. அமைப்பின் 2024 ஆண்டிற்கான 'United Nation Interagency Task Force Award' என்ற விருது தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
