தமிழகத்தில் தொடரும் டெங்கு பீதி !! மத்திய மருத்துவ குழு இன்று சேலம், செங்கல்பட்டில் ஆய்வு !!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், அது குறித்து ஆய்வு தமிழகம் வந்துள்ள மத்திய மருத்துவ குழு, இன்று சேலம் மற்றும் செங்கல்பட்டில் ஆய்வு செய்ய உள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்து 119 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தமிழக அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு இருந்தாலும் சேலம், நாமக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் உதவியைக் கோர வேண்டும்' என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை பேராசிரியர் அசுதோஷ் விஸ்வாஸ், டாக்டர் கல்பனா பரூவா, கெளசல் குமார், சுவாதி துப்ளிஷ், டாக்டர் வினய் கார்க் ஆகியோர் அடங்கிய குழுவினர் டெங்கு தொடர்பாக ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ளனர்.
நேற்று அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் ஆகியோருடன் இந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து மருத்து குழுவினர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் மத்திய மருத்துவ குழுவினர் இரு பிரிவுகளாக பிரிந்து இன்று சேலம் மற்றும் செங்கல்பட்டில் ஆய்வு செய்ய உள்ளனர் இந்த ஆய்வு முடிந்தபிறகு மத்திய அரசுக்கு அறிக்கை தர உள்ளனர்.
.