களவாணிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையர்! சென்னை முழுக்க கண்காணிக்கப்போகுது சிசிடிவி கேமரா!
சென்னை மாநகரில் குற்றங்களைக் குறைக்க சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
சென்னையில் குற்றச் சம்பவங்கள் நாளுக்குநாள் பெருகி வருகிறது. செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு, வழிப்பறி என பல்வேறு வகையில், பொதுமக்களுக்கு, ரவுடிகளால் தொந்தரவு ஏற்பட்டு வருகிறது.
சென்னையில், அதிகாலை, நள்ளிரவு மற்றும் மதிய நேரங்களில் பெரும்பாலும் கொள்ளை, வழிப்பறி நடக்கிறது. இரவு நேரங்களில் சினிமா பார்த்து விட்டு வீடு திரும்பும் ரசிகர்கள் போர்வையில் சில கொள்ளையர்கள் பொது மக்களோடு ஊடுருவி கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாலும், குற்ற சம்பவங்களைத் தடுப்பதில் முழுமையாக செயல்பட முடிவதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை மாநகர காவல் ஆணையரகம் முடிவு செய்தது.
இதையடுத்து சென்னை, புதுப்பேட்டையில் கண்காணிப்பு கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த மையத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் திறந்து வைத்தார்.
சிசிடிவி கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்து பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதால் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
குற்றங்களைக் குறைக்க சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டுக்குள் சென்னை மாநகரம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறினார்.