cases filed against tamil rockers website by cbcid police

புதிய திரைப்படங்களை முந்திக் கொண்டு இணையதளங்களில் வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப் படும் திரைப்படங்கள், தியேட்டர்களில் வெளியாகும் முன், பிரிவியு தியேட்டர்களில் பார்ப்பது போல், முதல் நாளே சுடச் சுட இணையதளங்களில் வெளியாகிவிடுகின்றன. திரைப்படம் பார்க்க ஏழை எளிய மக்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப் படுவதாகவும், ஒரு சாமானியனால் தியேட்டர்களுக்குச் சென்று சினிமா பார்க்க இயல்வதில்லை என்பதால் அவற்றை முன்னதாகவே இணையதளங்களில் இலவசமாக வெளியிடுவதாகவும் இது போன்ற இணையதளங்களில் கூறப்பட்டது. 

ஆனால், திரைப்படத் துறையினர் கொடுத்த புகார்களை அடுத்து, இணையதளங்களை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர் தகவல் தொழில்நுட்ப பிரிவு போலீஸார். விஷால் நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்க பொறுப்பேற்றதும் இது குறித்து புகார்கள் அளிக்கப் பட்டு, இதற்காகவே ஒரு குழு அமைக்கப்பட்டு தனிப்பட்ட வகையில் தீவிரமாகக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், இதனை ஒழிக்க முடியவில்லை. 

கடந்த மாதம், இது போன்று படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகி என்று ஒருவரைக் கைது செய்தனர் போலீஸார். ஆனாலும் படங்கள் தொடர்ந்து இணையதளங்களில் வெளியாகிக் கொண்டுதான் இருந்தன. அண்மையில் வெளியான மெர்சல் திரைப்படமும் தமிழ் ராக்கர்ஸில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் பாக்ஸ் ஆகிய இணைய தளங்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். சிபிசிஐடி போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.