car and van hits directly baby and mother died in spot and 12 people injured heavy
கோயம்புத்தூர்
சிறுமுகைப் பகுதியில் காரும், வேனும் நேருக்கு நேர் பலமாக மோதிக் கொண்டதில் 2 வயதுக் குழந்தையும், தாயும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பேர் பலத்த காயமடைந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளமடைப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (41). இவரது மனைவி சந்திரப்பிரியா. இவர்களது இரட்டைக் குழந்தைகள் ஆசித்ரா (2), ஹார்விக் (2).
வெங்கடேசன் கோயம்புத்தூர் அருகே பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், மே தின விடுமுறையையொட்டி வெங்கடேசன் தனது குடும்பத்தாருடன் நேற்று காலை ஈரோடு மாவட்டத்திலுள்ள பண்ணாரியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார். வெள்ளமடையைச் சேர்ந்த ஓட்டுநர் சம்பத்குமார் காரை ஓட்டிச் சென்றார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்த வேட்டைக்காரன்பேட்டையைச் சேர்ந்தவர் குணாளன் (70). இவரது மனைவி தமிழ்ச்செல்வி (60). இவர்களது மகன் சரவணன் (40). மே தின விடுமுறையொட்டி, குணாளன், தனது மனைவி தமிழ்ச்செல்வி, மகன் சரவணன், மருமகள் சங்கீதா (34), பேத்தி அமிர்தினி (2), உறவினர்கள் நகுல் (8), மணிமேகலை (50) ஆகியோருடன் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு வேனில் சென்றனர். வேனை கோபி, நாதேபாளையத்தைச் சேர்ந்த ரவி (36) ஓட்டிச் சென்றார்.
வனபத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு அனைவரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அதேபோல பண்ணாரியம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு வெங்கடேசன் குடும்பத்தினர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
வழியில், இந்த காரும், வேனும் சத்தி பிரதான சாலையில் பெத்திகுட்டை அருகே ஓதிமலைப் பிரிவுப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது நேருக்கு நேர் பலமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரும், வேனும் சுக்குநூறாய் நொறுங்கின.
இந்த விபத்தில், காரில் பயணித்த சந்திரப்பிரியாவும், அவரது மகள் ஆசித்ராவும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். கார் மற்றும் வேனில் பயணித்தவர்களில் படுகாயமடைந்த 12 பேர் சத்தி அரசு மருத்துவமனையிலும், கோவை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
சிறுமுகை காவல் துறை ஆய்வாளர் இளங்கோ மற்றும் காவலாளர்கள் விபத்தில் இறந்த இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
