எப்போதும் கூட்டணி கட்சியாகவே இருக்க முடியாது; காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் – திருநாவுக்கரசர்…
விருதுநகர்
தமிழகத்தில் அடுத்த தேர்தலிலோ, ஐந்து ஆண்டுகளிலோ, பத்து ஆண்டுகளிலோ காங்கிரசு ஆட்சி அமைக்க வேண்டும். எப்போதும் கூட்டணி கட்சியாகவே இருக்க முடியாது. கூட்டணி ஆட்சியில் சில அமைச்சர்கள் பதவிகளையாவது பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரசு தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி சார்பில் விருதுநகரில் பெருந்தலைவர் காமராசரின் 115–வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அப்போது காமராஜர் நினைவு இல்லம் சென்ற திருநாவுக்கரசர், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் இந்த விழாவையொட்டி விருதுநகர் தேசபந்துதிடலில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அகில இந்திய காங்கிரசு செயலாளர் மாணிக்கம் தாகூர் தலைமைத் தாங்கினார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் பேசியது:
“பெருந்தலைவர் காமராசர் தமிழகத்தில் விவசாயப் புரட்சியையும், தொழில் புரட்சியையும் ஏற்படுத்தினார். 14 ஆயிரம் பள்ளிக்கூடங்களை திறந்தார். இரண்டு பிரதமர்களை உருவாக்கியவர். அவர் பிறந்த இந்த மண்ணுக்கு மரியாதை செலுத்துவோம்.
ஆண்டுதோறும் விருதுநகரில் ஜூலை 15–ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி சார்பில் காமராசர் பிறந்தநாள் கொண்டாடப்பட வேண்டும் என மாணிக்கம் தாகூர் கேட்டுக் கொண்டார். அதுபற்றி பரிசீலிக்கப்படும்.
நான் பா.ஜ.க.வை விட்டு விலகியபோது மைத்ரேயன் எம்.பி., சசிகலா நடராஜன் தம்பி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் அதிமுகவில் சேர ஜெயலலிதா அழைக்கிறார்கள் என்று அழைத்தார்கள். ஆனால் மறுத்து விட்டேன்.
நான் காங்கிரசில் சேருவதற்கு மாணிக்கம் தாகூர் தான் காரணம். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அ.தி.மு.க. மூன்றாக உடைந்துவிட்டது. எம்.ஜி.ஆரை மறந்து விட்டார்கள். கட்சியும், ஆட்சியும் பலவீனப்பட்டு விட்டதால் பா.ஜ.க.விற்கு பயப்படுகிறார்கள்.
தமிழகத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 30 இலட்சம் காங்கிரசு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் 50 இலட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தற்போது நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட தலைவர்களுள் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.
நாளையோ, அடுத்த தேர்தலிலோ, 5 ஆண்டுகளிலோ, 10 ஆண்டுகளிலோ காங்கிரசு ஆட்சி அமைக்க வேண்டும். எப்போதும் கூட்டணி கட்சியாகவே இருக்க முடியாது. கூட்டணி ஆட்சியில் சில அமைச்சர்கள் பதவிகளையாவது பெற வேண்டும். காங்கிரஸ் ஆட்சி அமைக்க காமராசர் பிறந்த நாளில் சபதமேற்போம்.
ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தினால் அ.தி.மு.க.வினருடன் பிரதமர் மோடியிடமும் விசாரணை நடத்த வேண்டும். ஜெயலிலதா மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது ராகுல் காந்தி வந்து பார்த்துச் சென்றார். பிரதமர் மோடி வரவில்லை. மோடி பயப்படுகின்ற ஒரே ஆள் ராகுல்காந்தி தான்” என்று திருநாவுக்கரசர் பேசினார்.
இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளர் நவீன், மாவட்டத் தலைவர்கள் ராஜா சொக்கர், தளவாய் பாண்டியன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், மாநில மகளிரணி செயலாளர் ஜான்சிராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகாசி ஜெகதீஷ் சங்கர், விருதுநகர் சங்கரபாண்டியன் ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான காமராசர் விருது வழங்கப்பட்டது.