Bus accident in Ooty 6 persons death

உதகை அருகே மந்தாடா பகுதியில் 200 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென் மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் மழை கொட்டோ கொட்டு என கொட்டி வருகிறது. குன்னூர், கோத்தகிரி, மந்தாடா, உதகை, கூடலூர், நடுவட்டம், எல்லநள்ளி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

கூடலூரில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்ட ஓடுகிறது. சாலைகள் முழுவதும் ஈரத்தில் நனைந்துள்ளதால் பேருந்துகளும், வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மிகக் குறைந்த வேகத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை ஊட்டியில் இருந்து மந்தாடாவுக்கு அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. பின்னர் 10 மணியளவில் மந்தாடாவில் இருந்து அதே பேருந்து 25 பயணிகளுடன் மீண்டும் உதகை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாதபடி மழை பெய்ததால் டிரைவர் நடராஜன் பேருந்தை மிக மெதுவாக ஓட்டிக் கொண்டு வந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து அருகில் உள்ள 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த பேருந்து சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. அதில பயணம் செய்த பயணிகள் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

15 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து நீலகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .