Asianet News TamilAsianet News Tamil

BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளதுடன் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

BSP Tamilnadu State Leader Armstrong Murder CM MK Stalin Condolence Rya
Author
First Published Jul 6, 2024, 9:58 AM IST | Last Updated Jul 6, 2024, 9:58 AM IST

சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வசித்து வந்தார். இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். அவர் நேற்று இரவு தனது வீட்டின் வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது. உணவு டெலிவரி ஊழியர்கள் போல வந்த கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியது. இதனை தடுக்க வந்த அவரது நண்பர்கள் 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து அந்த கும்பல் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பித்தனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளதுடன் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.

 

திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios