வீட்டின் கதவை உடைத்து 11 சவரன் நகைகள் ரூ.30 ஆயிரம் பணம் கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் தனியார் பள்ளி ஆசிரியரின் வீட்டின் கதவை உடைத்து 11 சவரன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள ஆர்.எஸ்.மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நீதியானந்தன் (48). சின்னக்கீரமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தற்போது திருவாடானை அருகே உள்ள எல்.கே.நகர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி வீட்டு அவருடைய உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்றிருந்தார்.
இதனை எப்படியோ தெரிந்துகொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11 சவரன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில், அவர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது நகை, பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார். பின்னர் இதுகுறித்து உடனே அவர் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதனைத் தொடர்ந்து ஆய்வாளர் புவனேசுவரி மற்றும் காவலாளார்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
காவலாளர்களால், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.