Asianet News TamilAsianet News Tamil

உதயநிதி நீட் ரகசியத்தை சொன்ன அண்ணாமலை!

உதயநிதி நீட் ரகசியத்தை நானே சொல்லி விடுகிறேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதனை தெரிவித்துள்ளார்

BJP state president annamalai explains about udhayanidhi neet secret in kanyakumari en mann en makkal yatra
Author
First Published Aug 17, 2023, 10:20 PM IST

என் மண் என் மக்கள் என்ற நடைபயனத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடத்தி வருகிறார். ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கிய அவரது நடைபயணம் 18ஆவது நாளாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. நடைபயணத்தின் போது பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் அண்ணாமலை, பொதுமக்களிடையே கலந்துரையாடுவதுடன், தெருமுனைக் கூட்டங்களில் பேசி வருகிறார்.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்ட நடைபயணத்தின் போது பேசிய அண்னாமலை, “இந்தியாவில் அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது 753000 கோடி கடன் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து முதல் இடமாக மாறி உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்தின் கடன் என்பது சராசரியாக 352000 ரூபாயாக உள்ளது.” என்றார்.

கன்னியாகுமரியின் வளர்ச்சிக்காக பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டு வந்த 48 ஆயிரம் கோடியில் 20000 கோடியை கூட பயன்படுத்தவில்லை என குற்றம் சாட்டிய அண்ணாமலை, விவசாயத்திற்கு பெயர் போன கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம்புக்கும், மார்த்தாண்டம் தேனுக்கும், மட்டிப் பழத்துக்கும் புவிசார் குறியீடை மத்திய பாஜக அரசு வழங்கியுள்ளது என்றார்.

மீனவ மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்போம், மீன்வளக் கல்லூரி அமைப்போம், குமரியில் ரப்பர் பூங்கா அமைப்போம், தொழில் நுட்பப் பூங்கா அமைப்போம், வாழைப்பழம், நெல், கரும்பு என குறைந்தபட்ச ஆதார விலை கொண்டு வருவோம் என்று தேர்தல் வாக்குறுதியளித்த திமுக, குமரி மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார். கனிம வளங்களைக் கொள்ளையடிக்கத் துணை போகும் மனோ தங்கராஜால் தன் சிறப்பை கன்னியாகுமரி இழந்து நிற்கிறது எனவும் அவர் சாடினார்.

மோடி சுட்ட வடைகள் ஊசிப் போச்சு; தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக ஆளும் - ஸ்டாலின் பேச்சு!

உதயநிதி ஸ்டாலின் நீட்டினுடைய ரகசியத்தை சொல்ல வேண்டாம் நானே சொல்லிடுறேன் என்று கூறிய அண்னாமலை, “தனியார் கல்லூரிகளுக்கு மெரிட் லிஸ்ட்டை விட்டு அதன் மூலமாக பணம் பார்ப்பது தான் நீட் வருவதற்கு முன் இருந்த ரகசியம். அதனை நீட் உடைத்துள்ளது. நீட்டுக்கு முன்பு மருத்துவக் கல்லூரி காண என்ட்ரன்ஸ் எக்ஸாம் லிஸ்ட் திமுக கைக்கு வந்துவிடும். இவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அந்த லிஸ்ட் கொடுத்து விடுவார்கள். தனியார் மருத்துவக் கல்லூரி அந்த லிஸ்டில் இருக்கும் பெயர்களை பார்த்து யாருக்கெல்லாம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைக்குமோ அந்த மாணவர்களை அழைத்து தனியார் மருத்துவ கல்லூரியில் டோக்கன் போட்டுவிட்டு சீட்டை வழங்கி விடுவார்கள். கவுன்சிலிங் அரசு கல்லூரியில் சீட் கிடைத்தவுடன் தனியார் மருத்துவக் கல்லூரியில் போடப்பட்ட டோக்கன் free ஆய்டும். இந்த free-ஆன சீட்டை எந்த என்ட்ரன்ஸ் எக்ஸாமும் எழுதாத ஒரு மாணவருக்கு 1.5 கோடி ரூபாய்க்கு விற்று விடுவார்கள். இதுதான் திமுகவின் விஞ்ஞான ஊழல்.” என்றார்.

“ஆறு முறை ஆட்சியில் இருந்த திமுக மொத்தமாக தமிழகத்துக்கு கொண்டு வந்த அரசு மருத்துவக் கல்லூரிகள் வெறும் ஐந்து தான். தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் அதற்கான காரணம் அதனுடைய ஓனர் திமுகவை சார்ந்தவர்கள்.” என்றும் அண்ணாமலை சாடினார்.

 

 

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “தமிழகத்திலே சுயமாக படித்து வளர்ந்து முன்னேறி கொண்டிருக்கும் சமுதாயத்திற்கு மரியாதை இல்லை. திராவிட மாடல் அரசு நாங்கள் கட்சி திறந்த பிறகு தான் தமிழ்நாடு வளர்ச்சி கண்டிருக்கிறது என்று சொல்வது உலகத்திலேயே இது போன்ற பொய்யை யாரும் சொன்னதில்லை. நீட் என்பது இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு தமிழகத்தில் இருக்கத்தான் போகிறது. இன்னும் ஆயிரம் ஆயிரம் குழந்தைகள், முதல் தலைமுறை குழந்தைகள் நீட் தேர்வு மூலமாக அரசு மருத்துவக் கல்லூரிக்கு செல்ல தான் போகிறார்கள். திமுகவின் பித்தலாட்டம் நீட்டை தடுத்து நிறுத்த முடியாது.” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

பிரதமர் மோடி, 23 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பு எடுத்ததில்லை. தாய் இறந்த பொழுது கூட மூன்று மணி நேரத்தில் அரசு வேலைகள் அமர்ந்தவர் பிரதமர் மோடி. ஆனால், மனோ தங்கராஜ் பிரதமரை பார்த்து சமூக வலைத்தளங்களில் மூச்சு இருக்கிறதா என்று கேட்கிறார் இன்னொரு முறை அந்தப் பதிவை போட்டால் நானே நேரில் வருவேன்.” என எச்சரிக்கை விடுத்தார்.

“தமிழ்நாட்டில் படங்களுக்கு ரிவ்யூ தருவதில் ப்ளூ சட்டை மாறன் அல்ல நம்பர் ஒன் ஸ்டாலின் தான். முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தில் அவர் சொன்ன 6100 கோடியில் ஆறு ரூபாய் கூட இன்னும் வரவில்லை.” என்றும்  அண்ணாமலை குற்றம் சாட்டினார். வரும் பாராளுமன்றத் தேர்தலில், பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பவாத திமுக காங்கிரஸ் ஏமாற்றுக் கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் மோடியின் நல்லாட்சியைத் தொடரச் செய்வோம் என்றும் அண்ணாலை சூளுரைத்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios