தொழிலாளர்களை வஞ்சிக்கும் திமுக...கொடுத்த வாக்குறுதியை ஓராண்டாக ஏமாற்றி சாதனை..! ஸ்டாலினை சீண்டிய அண்ணாமலை
பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதாக தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்து அதன் காரணமாக ஆட்சிக்கு வந்த பின் பழைய ஓய்வூதிய திட்டத்தை பற்றி எதுவுமே பேச மறுக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்
வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கும், பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டிய கிடைக்க கூடிய பண பலன்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்து, அவற்றை வழங்க எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல் தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது திமுக அரசு. போக்குவரத்து கழக தொழிலாளர் நலன் கருதி கீழ்க்கண்ட நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 1. போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 12(3) ஒப்பந்தம் முறைப்படி மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு புதிய ஊதியம் வழங்குவது நடைமுறையில் உள்ளது. ஆனால் அதன் அடிப்படையில் 14-வது ஒப்பந்தம் கடந்த 01/09/2019-ல் நிறைவு பெற்று தொழிலாளர்கள் அனைவருக்கும் புதிய ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இடையில் கொரோனா காலகட்டத்தில் அரசு இயந்திரங்கள் முடங்கி கிடந்த காரணங்களாலும் அதன் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 15 மாதங்கள் கடந்த பிறகும், வருகின்ற 01/09/2022 அன்று 15-வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தருணத்தில் 14வது ஊதிய உயர்வே இன்று வரை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.
வெறும் கையோடு ஓய்வு பெறும் தொழிலாளர்கள்
2. ஓய்வு பெற்ற சுமார் 87000 பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய DA கடந்த 85 மாதங்களாக வழங்கவில்லை அதனால் DA உயர்வு கிடைக்காமல் வயது முதிர்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் வயது முதிர்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவே அவர்களுக்கு வழங்க வேண்டிய DA-வை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 3.கடந்த இரு மாதங்களில் ஓய்வு பெற்ற சுமார் 3000 தொழிலாளர்களுக்கு எந்த விதமான பணம் பலன்களும் வழங்காமல் வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்பும் போக்கு தற்போதைய ஆட்சியாளர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக அவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பணப்பலன்களை இந்த அரசு வழங்கிட வேண்டும்.
ஓய்வூதிய திட்டம்- மவுனம் காக்கும் திமுக
4. பல வாக்குறுதிகளை கொடுத்து வெற்றிபெற்ற இந்த திமுக அரசு, அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றாமல் இருப்பது தான் இவர்களின் ஓராண்டு சாதனை. பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதாக தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்து அதன் காரணமாக ஆட்சிக்கு வந்த பின் பழைய ஓய்வூதிய திட்டத்தை பற்றி எதுவுமே பேச மறுக்கிறார்கள்.5. உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து அவர்களின் கல்வித் தகுதிக்கு தகுந்த பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆனால் இந்த அரசு உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகள் பொறியியல் படிப்பு முடித்து இருந்தாலும் கூட கல்வித் தகுதியை பாராமல் அவர்களுக்கு ஓட்டுனர் நடத்துனர் பணியையே வழங்கி வருகின்றனர்.இது போன்ற பல கோரிக்கைகளை பல மாதங்களாக முன்வைத்து தீர்வுக்காக காத்திருக்கும் போக்குவரத்து தொழிலாளர்களை இந்த அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை தமிழக பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அரசின் மெத்தன போக்கால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் அது பொதுமக்களை பாதிக்கும். இதற்கு மேலும் காலம் கடத்தாமல் தொழிலாளர்களின் மேற்கண்ட நேர்மையான கோரிக்கைகளை இந்த அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்