போகி பண்டிகை… புகை மூட்டத்தால் திணறும் சென்னை…. திருப்பிவிடப்பட்ட விமானங்கள் !!
பொது மக்கள் இன்று அதிகாலையிலேயே போகி பண்டிகை கொண்டாடி வருவதால் நகரெங்கும் கடுமையான புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது.ஏற்கனவே உள்ள பனிமூட்டத்துடன் தற்போது புகை மூட்டமும் சேர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.
சென்னையில் போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பனி மூட்டத்துடன் புகை மூட்டமும் சூழ்ந்த நிலையில் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன. 2 அடி தூரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாக அளவுக்கு கடும் புகை சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் பனி மூட்டம் மற்றும் போகி பண்டிகை புகை மூட்டம் காரணமாக சென்னை வரும் விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை விமானநிலையத்தில் அதிகாலை நேரத்தில் வந்திறங்கும் விமானங்கள் பனி மூட்டம் போகி பண்டிகை புகை மூட்டம் காரணமாக இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னைக்குவரும் 19 விமானங்கள் வேறு விமானநிலைங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
சென்னையில் அதிகாலை 4 மணி முதல் விமானங்கள் புறப்பாடும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.