இராமநாதபுரம்:
தொலைபேசியில் வங்கி ஊழியர் பேசுவதுபோல் பேசி, ஏ.டி.எம் எண்ணை கேட்டு உங்கள் கணக்கில் இருந்து பணம் திருடும் கும்பல் அதிகரித்துள்ளது. எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.
கீழக்கரையைச் சேர்ந்த முகமது கனி, முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, பாம்பன் இராமராஜா ஆகியோரின் ஏ.டி.எம். இரகசிய எண்ணை அலைபேசியில் கேட்டு தெரிந்த மர்ம நபர்கள் மூன்று பேரின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.2 இலட்சத்து 69 ஆயிரத்தை திருடியுள்ளனர்.
இதுகுறித்து எஸ்.பி.மணிவண்ணன் கூறியதாவது:
“ஏ.டி.எம். இரகசிய எண்ணைத் தெரிந்துக் கொண்டு வங்கிகளில் இருந்து பணத்தை நுாதனமாக மோசடி செய்வது அதிகரித்து வருகிறது.
அலைபேசியில் வங்கி அதிகாரி பேசுவதாக கூறி வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு இரகசிய எண்ணை வாடிக்கையாளர்களிடம் கேட்கும் நடைமுறை எந்த வங்கியிலும் இல்லை.
இதை தெரியாத வாடிக்கையாளர்கள் அறியாமையால் வங்கி கணக்கு விபரங்களை நுாதன மோசடி கும்பலிடம் அலைபேசியில் தெரிவித்துவிட்டு பணத்தை இழந்து விடுகின்றனர்.
வங்கி கணக்கு விபரங்களை வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரடியாக சென்று மட்டுமே தெரிவிக்க வேண்டும்.
யாரேனும் அலைபேசியில் அழைத்து வங்கி கணக்கு தொடர்பான விபரம் கேட்டால் அழைப்பை துண்டித்து, அருகில் உள்ள காவல் நிலையத்தில், அலைபேசி அழைப்பு குறித்து புகார் தெரிவிக்க வேண்டும்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏ.டி.எம். இரகசிய எண்ணைத் தெரிந்து கொள்ள அழைக்கும் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றுத் தெரிவித்தார்.
