தமிழகம் முழுவதும் வாகன தணிக்கை செய்ய தடை? - தமிழக காவல்துறை அதிரடி..!
காவல் ஆய்வாளரால் தாக்கப்பட்டு கர்ப்பிணி பெண் மரணமடைந்த நிலையில், அனைத்து மாவட்டத்திலும் மறு உத்தரவு வரும்வரை வாகன தணிக்கை செய்ய தடை விதித்து காவல் கண்காணிப்பாளர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கார் ஓட்டுநர் மணிகண்டன் காவல் ஆய்வாளர் ஒருவர் தரக்குறைவாக திட்டியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியடைய வைத்தது.
இதையடுத்து காவலர்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், சூளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி உஷா, 3 மாத கர்ப்பிணியான மனைவியுடன், திருச்சியில் நண்பரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க சென்றார்.
அப்போது, திருச்சி துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், இவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை மறித்த்துள்ளனர். வ்கனம் சோதனை சாவடியில் நிற்காமல் சென்றதை அடுத்து, இரு சக்கர வாகனத்தை காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்தி சென்று எட்டி உதைத்திருக்கிறார்.
இதில் நிலை தடுமாறிய உஷா மற்றும் அவரது கணவர் ராஜா இரு சக்கர வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த உஷா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் காமராஜ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துறை ரீதியாக அவர் சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து குற்றவியல் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், காவல் ஆய்வாளரால் தாக்கப்பட்டு கர்ப்பிணி பெண் மரணமடைந்த விவகாரம் குறித்து 8 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டத்திலும் மறு உத்தரவு வரும்வரை வாகன தணிக்கை செய்ய தடை விதித்து காவல் கண்காணிப்பாளர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.