வேகத்தடையில் ஏறியபோது நிலைதடுமாறிய ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து மாணவிகள் பலத்த காயம்…
திருவாரூர்
முத்துப்பேட்டையில் வேகத்தடையில் ஏறியபோது நிலைதடுமாறிய ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த மாணவிகள் இருவர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள செம்படவன்காடு பகுதியில் அதிக பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்களில் பலர் ஆட்டோ மற்றும் வேன்கள் மூலமாக பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். இதனால் செம்படவன்காடு பகுதியில் ஆட்டோ மற்றும் வேன்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் செம்படவன்காடு பகுதியில் இயக்கப்படும் ஆட்டோக்கள், வேன்களில் அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்வதாக மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சமயத்தில்தான் இரயில்வேகேட் அருகே ஒரு ஆட்டோ, பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்றது. அந்த ஆட்டோவில் அளவுக்கதிமாக மாணவிகள் பயணம் செய்துள்ளனர். அப்போது, ஆட்டோ அப்பகுதியில் உள்ள வேகத்தடை மீது ஏறி இறங்கியபோது நிலை ஆட்டோ நிலை தடுமாறியது.
அப்போது ஆட்டோவில் இருந்து இரண்டு மாணவிகள் தவறி கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மாணவிகள் இருவரையும் மீட்டு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மருத்துவமனைகு கொண்டுசெல்லப்பட்டனர்.
முத்துப்பேட்டை, செம்படவன்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோக்கள் மற்றும் வேன்களில் அளவுக்திகமாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வதால் தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன என்று மக்கள் கொதித்து எழுந்து இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.