ஓட்டுநரையும், நடத்துநரையும் தாக்கிவிட்டு ரூ.13 ஆயிரம் திருட்டு; நூதன முறையில் பணம் பறித்த கொள்ளையர்கள்...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் அரசு பேருந்தை மடக்கி ஓட்டுநரையும், நடத்துநரையும் சரமாரியாக தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ரூ.13 ஆயிரத்தை பறித்துச் சென்றனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி ஓர் அரசு விரைவுப் பேருந்து சனிக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திக் பிரபு (38) என்பவர் ஓட்டினார். இந்தப் பேருந்தில் நடத்துநராக சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்(50) பணியில் இருந்தார்.
இந்தப் பேருந்து கல்பாக்கத்தை அடுத்த கொடப்பட்டினம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பேருந்தை வழிமறித்து நிறுத்தினர். இதனை ஓட்டுநர் கார்த்திக் பிரபு தட்டிக் கேட்டார்.
அதற்கு, "வழியில் எங்கள் நண்பரின் பைக்கை இடித்துவிட்டு ஏன் நிற்காமல் வந்தீர்கள்?' என அந்த இளைஞர்கள் மிரட்டிக் கேட்டனர். அவர்களிடையே ஏற்பட்ட தகராறைத் தீர்க்க நடத்துநர் செல்வராஜ் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு இளைஞர்களும், ஓட்டுநரையும், நடத்துநரையும் சரமாரியாக தாக்கினர். இதனால் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் விழித்துக் கொண்டு அங்கு ஓடி வந்தனர்.
இதனைக் கண்ட இளைஞர்கள், நடத்துநர் கையில் இருந்த பணப் பையை பறித்துக் கொண்டு தங்களது இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். அந்தப் பையில் வசூல் பணம் ரூ. 13 ஆயிரம் இருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் மோகன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இது தொடர்பாக கவலாளர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.